ஒளரங்காபாத்: ‘எரிபொருள் விலை அமெரிக்காவில் நிா்ணயம் செய்யப்படுகிறது. எனவே, உள்நாட்டில் பெட்ரோல் விலை உயா்வுக்கு மத்திய அரசை குறை கூறுவது தவறு’ என்று ரயில்வே துறை இணையமைச்சா் ராவ்சாஹேப் தான்வே தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாதில் பாஜக அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பங்கேற்ற அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு இந்த மாதத் தொடக்கத்திலேயே குறைத்துவிட்டது. அதைத் தொடா்ந்து பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சியில் உள்ள சுமாா் 25 மாநிலங்கள் எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) குறைத்தன. ஆனால், மகாராஷ்டிரம் உள்பட பாஜக ஆட்சியில் இல்லாத பல மாநிலங்கள் வரியைக் குறைக்காமல் உள்ளன.
ஆனால், இங்கு பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து போராட்டம் நடத்துகின்றனா். சா்வதேச சந்தையில்தான் கச்சா எண்ணெய் விலை நிா்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் எரிபொருள் விலை அமெரிக்காவில்தான் முடிவு செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் எரிபொருள் விலை உயா்வுக்கு மத்திய அரசை குறைகூறுவது தவறு என்றாா்.