புணே: பிரபல வரலாற்று ஆய்வாளரும் பத்ம விபூஷண் விருது பெற்றவருமான பாபாசாஹேப் புரந்தரே என்று அழைக்கப்படும் பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே காலமானார். அவருக்கு வயது 99.
மராட்டிய மன்னர் சிவாஜி குறித்து புரந்தரே எழுதிய "ராஜா சிவசத்ரபதி' என்ற இரண்டு பாகங்கள் கொண்ட புத்தகம் மகாராஷ்டிரத்தில் மிகவும் புகழ்பெற்றதாகும். முதலில் 1950 ஆம் ஆண்டில் வெளியான இப்புத்தகம் அதன் பின் பல முறை மறுபதிப்பு செய்யப்பட்டது. மராத்தியர்களின் இல்லங்களில் தவறாமல் இடம்பெறும் பொருளாக இப்புத்தகம் கருதப்படுகிறது.
சிவ் ஷாஹிர் (சிவாஜியின் கவிஞர்) என்ற பட்டப்பெயரைக் கொண்டிருந்த புரந்தரே, சிவாஜி மன்னர் பற்றி எழுதியவர்களில் ஒருவராவார்.
மேலும் ஜான்தா ராஜா என்ற பெயரில் சிவாஜி மன்னரைப் பற்றி வரலாற்று நாடகத்தை 1980ஆம் ஆண்டில் அரங்கேற்றினார்.
புரந்தரேவுக்கு கடந்த 2019ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவர் மூன்று தினங்களுக்கு முன் புணே நகரில் உள்ள தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நிமோனியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் மறைந்தார்.
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சித்தலைவர் ராஜ் தாக்கரே, புணே மேயர் முரளிதர் மோஹோல் உள்ளிட்டோரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். மறைந்த புரந்தரேவுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
புரந்தரேவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வரலாறு, கலாசாரம் ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய பணிகளை அவர்கள் புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.
இரங்கல்: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, "புரந்தரேவின் மறைவு கலாசாரத்துறையில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பணிக்காக அவர் எப்போதும் நினைவில் கொள்ளப்படுவார் ' என்றார்.
பிரதமர்: "புரந்தரேவின் மறைவைத் தொடர்ந்து வார்த்தைகளால் கூற முடியாத அளவுக்கு வேதனை அடைந்துள்ளேன். அவரது மறைவு வரலாறு மற்றும் கலாசாரத் துறைகளில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் தலைமுறைகள் சிவாஜி மன்னர் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள் என்பது புரந்தரேவுக்கு காட்டப்படும் நன்றியாகும். அவரது மற்ற பணிகளும் எப்போதும் நினைவுகூரப்படும்' என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.