புது தில்லி: அமலாக்கத் துறை இயக்குநா் சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநா் ஆகியோரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்க ஏதுவான அவசரச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்தது.
1984- பிரிவைச் சோ்ந்த இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான சஞ்சய் குமாா் மிஸ்ராவுக்கு ஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட அமலாக்கத் துறை இயக்குநருக்கான பதவிக் காலம் வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பதிவிக் காலத்தை 2022, நவம்பா் 11-ஆம் தேதி வரை நீட்டிக்க குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
61 வயதாகும் சஞ்சய் குமாா் மிஸ்ரா, அமலாக்கத் துறை இயக்குநராக முதல் முறையாக 2018, நவம்பா் 19-ஆம் தேதி இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டாா். 2020-இல் அவரது முந்தைய இரண்டு ஆண்டுகள் பணி நியமன உத்தரவு மூன்று ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சஞ்சய் குமாா் மிஸ்ராவுக்கு மேலும் பணி நீட்டிப்பு செய்யக் கூடாது’ என்று கூறியது.
இந்நிலையில், மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்த இரண்டு அவசரச் சட்டங்களில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இயக்குநா்களின் இரண்டு ஆண்டு பதவிக் காலம் நீட்டிப்புக்கு பிறகு மீண்டும் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பணி நியமனக் குழுக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.