புது தில்லி: ராணுவத்தில் பன்முகப் பணியாளர் (எம்டிஎஸ்) தேர்வில் லஞ்சம் வாங்கிய புகாரில் ராணுவ அதிகாரிகள் (ஹவில்தார்) இருவரை சிபிஐ கைது செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ செய்தித்தொடர்பாளர் ஆர்.சி.ஜோஷி கூறியதாவது:
ராணுவத்தில் எம்டிஎஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ஹவில்தார்கள் சுஷாந்த் நாஹாக், நவீன் ஆகிய இருவரும், "பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளபோதும், அவர்களின் விண்ணப்பம் முழுமையாக இல்லாததால் நியமனம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, ரூ. 2.5 லட்சம் பணம் கொடுத்தால், எந்தவித சிக்கலும் இன்றி நியமனக் கடிதம் அனுப்பப்படும். இதில் முன்பணமாக ரூ. 50,000 உடனடியாக தரவேண்டும்' என்று கேட்டுள்ளனர்.
அதற்கு ஒப்புக்கொண்ட புகார்தாரர், அந்த ஹவில்தாரின் வங்கிக் கணக்குக்கு முதல் தவணையாக ரூ. 30,000 லஞ்சப் பணத்தை இணையவழியில் அனுப்பிவிட்டு, அந்த ஆதாரங்களுடன் சிபிஐயிடம் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், ராணுவமும் சிபிஐயும் இணைந்து கூட்டாக விசாரணை மேற்கொண்டு, புகார்தாரரிடமிருந்து இரண்டாவது தவணையாக ரூ. 20,000 லஞ்சப் பணத்தை செவ்வாய்க்கிழமை இரவு பெறும்போது ஹவில்தார் இருரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், புணேயில் அவர்கள் இருவருக்கும் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, புகாருக்கு ஆதாரமாக சில ஆவணங்களையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட இருவரும் புணேயில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 5 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதி அளித்தார் என்று ஜோஷி கூறினார்.