ராஜஸ்தானில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு முதல்வர் அசோக் கெலாட் திங்கள்கிழமை இலாகா ஒதுக்கினார்.
ராஜஸ்தான் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைக்கப்பட்டு 15 அமைச்சர்கள் புதிதாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 12 பேர் புதுமுகங்கள். ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், முதல்வர் அசோக் கெலாட் அமைச்சர்களுக்கான இலாகாவை ஒதுக்கியுள்ளார். உள் துறை, நிதித் துறை பொறுப்புகளை மீண்டும் தன்வசமே வைத்துள்ளார் முதல்வர் கெலாட்.
பி.டி. கல்லாவுக்கு கல்வியும், லால் மீனாவுக்கு சுகாதாரத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரமோத் ஜெயின் பயாவுக்கு சுரங்கம் மற்றும் பெட்ரோலியத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. லால்சந்த் கடாரியாவுக்கு வேளாண் துறையும், உதய்லால் அஞ்சனாவுக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டு அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட விஷ்வேந்திர சிங்குக்கு மீண்டும் சுற்றுலாத் துறையே வழங்கப்பட்டுள்ளது. சாலே முகமதுவுக்கு சிறுபான்மையினர் நலத் துறை வழங்கப்பட்டுள்ளது. பிரிஜேந்திர ஓலாவுக்கு சாலைப் போக்குவரத்துத் துறையும், பஜன் லால் ஜாதவுக்கு பொதுப் பணித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஷகுந்தலா ராவத் தொழில் துறையைப் பெற்றுள்ளார்.
புதிய அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 5 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.