நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்தும் நோக்கில் வங்கி சட்ட திருத்த மசோதாவை இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கூட்டத்தொடரில், மொத்தம் 26 மசோதாக்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்த வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்தல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1970 மற்றும் 1980இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல், வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949இல் திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மசோதா அறிமுகப்படுத்தி விவாதம் மேற்கொண்டு இந்த குளிர்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என அலுவலர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
2021-22 நிதிநிலை அறிக்கையின்போதே, 1.75 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் வகையிலான அரசின் தனியார்மய நடவடிக்கையின்படி இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயப்படுத்தப்படும் என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்து மசோதாவை தவிர்த்து, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் திருத்த மசோதா 2021 இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படத்தப்படவுள்ளது.
தேசிய ஓய்வூதிய முறை அறக்கட்டளையிலிருந்து ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை பிரிக்க இந்த மசோதா வழிவகை செய்யவுள்ளது.
இதையும் படிக்க | பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
அந்த வகையில், ஓய்வூதிய பாதுகாப்பு திட்டம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகியவை வலுப்படுத்த இந்த மசோதா வழிவகுக்கவுள்ளது.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தின்படி, தேசிய ஓய்வூதிய முறை அறக்கட்டளையின் அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் கடமைகள் ஆகியவை அறக்கட்டளை அல்லது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.