மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ன் அண்ணன் மகளும், எம்ஜிஆருக்கு தனது சிறுநீரகத்தை தானமளித்தவருமான எம்.ஜி.சி. லீலாவதி இன்று சென்னையில் காலாமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த லீலாவதி, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் லீலாவதி. தனது சித்தப்பா, எம்ஜிஆருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, கேரளத்தில் வசித்து வந்த லீலாவதி, செய்தித்தாள்கள் வழியாக இதனை அறிந்திருக்கிறார்.
உடனடியாக, தனது கணவரின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டு, மருத்துவமனைக்கு வந்த லீலாவதி, உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, எம்ஜிஆருக்கு தனது சிறுநீரகத்தைத் தானமளித்தார். ஆனால், லீலாவதிதான் தனக்கு சிறுநீரகத்தை தானமளித்தார் என்பதை முதலில் எம்ஜிஆருக்கு யாரும் சொல்லவில்லை. அவர் உணர்ச்சிவயப்படுவார் என்பதால், அவருக்கு தெரியப்படுத்தாமல் இருந்தார்கள்.
எம்ஜிஆர் பூரண குணமடைந்து, திரும்பிய பிறகு, ஒரு நாள் நாளிதழ்கள் வாயிலாக இந்தச் செய்தியை அறிந்து கொண்ட எம்ஜிஆர், உடனடியாக லீலாவதியை நேரில் அழைத்து நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.