ஒமிக்ரான் எனும் புதிய வகை கரோனா குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூட்டத்தில் சனிக்கிழமை முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனாவுக்கு ஒமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் பரவலைத் தடுக்க பல்வேறு உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் சனிக்கிழமை மாலை உயர்நிலை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனிடையே, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் கண்காணிக்கப்பட்டதில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனைகளின் முடிவிலேயே அது புதிய வகை கரோனாவா இல்லையா என்பது தெரியவரும். இதனால், அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | புதிய வகை கரோனா: பிரதமர் மோடி ஆலோசனை
இந்த நிலையில், கர்நாடகத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் உள்ளிட்ட அமைச்சர்கள், சுகாதாரத் துறை உள்ளிட்ட மற்ற துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
"அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பணியாற்றுபவர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். நோய்த் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுவர்."