உத்தரகண்ட் மாநிலம் தார்சுலா மாவட்டத்தில் தர்மா எல்லைக் கிராமத்தில் நடத்தப்பட்ட புவியியல் ஆய்வில், அக்கிராமத்தில் உள்ள வீடுகள், பின்நோக்கி சரிவதாகவும் விரைவில் அது மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாறும் அபாயமிருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, கிராமத்தை ஆய்வு செய்த புவியியல் நிபுணர்கள் குழுவின் தலைவர் பிரதீப் குமார் கூறுகையில், இந்த கிராமத்தில் மொத்தம் வசிக்கும் 150 குடும்பங்களில் குறைந்தது 35 குடும்பங்கள் உடனடியாக வேறு வீடுகளுக்கு இடம்பெயரவேண்டிய அபாய கட்டத்தில் இருக்கிறார்கள். அந்த வீடுகள் பின்நோக்கி சரிந்து வருகின்றன.
சோப்லா - டிடாங் இடையேயான சாலையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் ஒருபக்கம் நடந்து வருவதால், அதன் எதிரொலியாக, மண்ணின் உறுதித் தன்மை குறைந்து, வீடுகளின் நிலைத்தன்மை குறைவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இந்தப் பகுதியில் மண்ணின் தன்மை தளர்ச்சியாக இருக்கும் நிலையில், பாறைகள் இல்லாததும் இதற்குக் காரணமாகிறது என்று கூறுகிறார்கள்.