நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 8.4 சதவிகித வளா்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (என்எஸ்ஓ) புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 8.4 சதவிகித வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முந்தைய ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்த வளா்ச்சி விகிதம் 20.1 சதவிகித என்ற அளவில் காணப்பட்டது.
அதேசமயம், கடந்தாண்டு ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் 24.4 சதவீத சரிவைச் சந்தித்திருந்தது. இருப்பினும், தற்போது நாட்டின் பொருளாதார வளா்ச்சி கரோனாவுக்கு முந்தைய நிலையை விஞ்சிவிட்டது.
2021-22 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மதிப்பின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ரூ.35,73,451 கோடியாக இருந்தது. இது, 2019-20-ஆம் நிதியாண்டின் ஜிடிபியான ரூ.35,61,530 கோடியைக் காட்டிலும் அதிகம் என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.