மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் மாநிலங்களவையிலிருந்து குளிர்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்க கூடாது என இடைநீக்கம் செய்வதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆலோசனையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுகவின் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, இந்திய கம்யூ. சுப்புராயன், மதிமுக வைகோ, விசிக திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், எம்.பி.க்கள் இடைநீக்கம் குறித்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் முறையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.