ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்குவதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் 1953ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்ட நிலையில், கடும் நட்டத்தில் மூழ்கிய நிலையில் கடந்த ஆண்டு ஏலம்விட முடிவு செய்யப்பட்டது. ஆனால், கரோனா தொற்று காரணமாக ஏலம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இறுதி ஏல விவரங்களை சமர்ப்பிக்கக் கூறியது. அதன்படி, டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்க விரும்பி ஏலத்தில் பங்கேற்றது.
இதையடுத்து, இந்த ஏலத்தில் டாடா நிறுவனத்தின் ஏலத் தொகை மற்றும் திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கியதாகவும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வெளியான தகவல் உண்மையல்ல என்று மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவன ஏலம் குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும், அதன்பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறை செயலர் ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.