மும்பை கடற்கரையில் சனிக்கிழமையன்று ஒரு சொகுசு கப்பலில் விருந்தினர் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது, சோதனை நடத்தப்பட்டதில் இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேர் காவலில் எடுக்கப்பட்டனர். இதை, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு உறுதி செய்துள்ளது.
ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கப்பலுக்கு பயணிகள் போல் மாறுவேடம் போட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "சோதனையின்போது, கிடைத்த தகவலின்பேரில் சந்தேகத்திற்குள்ளானவர்கள் அனைவரையும் விசாரணை செய்தோம். கொகைன், மெஃபெட்ரோன், கஞ்சாசெடி உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அப்போது, இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேர் காவலில் எடுக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து விசாரிக்கப்பட்டுவருகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் ஞாயிற்றுக்கிழமையன்று மும்பைக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
மும்பையிலிருந்து கடலுக்கு சென்ற பிறகே விருந்தினர் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அனைவரது வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில், கைது செய்யப்பட்டு என்டிபிஎஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்படுவர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் எவரேனும் சிக்கியுள்ளார்களா என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்க் ராஜ்புட்டின் மறைவுக்கு பிறகு, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.