உத்தரப்பிரதேசத்தில் தரையிறங்க பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியின் ஹெலிகாப்டருக்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.
லக்கீம்பூர் மாவட்டத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பஞ்சாப் முதல்வர் உத்தரப்பிரதேசம் செல்ல இன்று திட்டமிட்டிருந்தார்.
இதையடுத்து, அவரது ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கும், லக்கீம்பூர் செல்ல பாதுகாப்பு ஏற்பாடு செய்து தருமாறும் உ.பி. அரசிற்கு பஞ்சாப் அரசு தரப்பில் அனுமதிகோரி கடிதம் எழுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், லக்கீம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் பஞ்சாப் முதல்வரின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி தர முடியாது என உத்தரப்பிரதேச அரசு பதிலளித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றதாகவும், இதனால் கார்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதியதாகவும் பின்னர் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | உ.பி.: விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 போ் பலி
இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பாஜகவினர் 4 பேர் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வன்முறைக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன்தான் காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில் அவரின்மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.