அத்துமீறலில் ஆங்கிலேய அரசைக் காட்டிலும் பாஜக அரசு விஞ்சி நிற்பதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமரிசித்துள்ளார்.
லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.
இதையும் படிக்க | லக்கிம்பூர் போராட்டத்தில் பிரியங்காவை சந்திக்கிறார் ராகுல்
உத்தரப்பிரதேச மாநிலம் சுனாசிர் நாத் குருத்வாராவில் நடைபெற்ற சமாஜ்வாதி கட்சியின் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர் தனது அதிகாரத்தின் மூலம் விவசாயிகளின் குரலை ஒடுக்குவதாக குற்றம்சாட்டினார்.
“அத்துமீறலில் பாஜக அரசு ஆங்கிலேய அரசையே விஞ்சி நிற்கிறது. இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல” எனத் தெரிவித்தார்.
“உலகில் கொடூரமான ஆட்சியாளர்கள் இருந்தனர். ஆனால் உலகில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததில்லை. பாஜக ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படுகிறது. அருகிலுள்ள லக்கிம்பூர் மாவட்டத்தில், சீக்கியர்களும் விவசாயிகளும் நசுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். விவசாயிகளை பயங்கரவாதிகள் என விமரிசிக்கும் பாஜகவினர் விவசாயிகளின் வயல்களில் விளைவதை சாப்பிடக்கூடாது," என அகிலேஷ் தெரிவித்தார்.