திருவனந்தபுரம்: நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி வலியுறுத்த வேண்டுமென, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதம், கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் இன்று வழங்கப்பட்டது.
நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும், அதனை ரத்து செய்திட, மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
கடிதத்தின் தொடர்ச்சியாக, ஸ்டாலின் உத்தரவுப்படி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை, திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும், நீட் தேர்வு குறித்து தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் அளித்த பரிந்துரைகளையும் இணைத்து வழங்கினார்.
அப்போது, தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார், கேரள மாநில திமுக அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.