தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் நல்ல ஆடைகளை அணிய வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி அறிவுறுத்தியிருந்தார். அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆடையில் கவனம் செலுத்தாமல் தொகுதிக்குக் கொடுத்த வாக்குறுதிகளை சென்று கவனியுங்கள் என அரவிந்த கேஜரிவால் கூறியுள்ளார்.
அண்மையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு சன்னி பேட்டியளித்த போது, பஞ்சாப் காங்கிரஸ் குழப்பத்தில் உள்ளது என்ற கேஜரிவாலின் விமரிசனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "யாராவது நல்ல ஆடைகளை வாங்க கேஜரிவாலுக்கு 5 ஆயிரம் ரூபாய் பணம் அளிக்க வேண்டும். அவரிடம் கோட் சூட் கூட இல்லையா. மாதம் இரண்டரை லட்சம் சம்பாதிக்கும் அவர், குறைந்தபட்சம் ஒரு சில நல்ல ஆடைகளையாவது வைத்திருக்க வேண்டும்" என்றார்.
இவர் பேசிய காணொலி வைரலாக, அவருக்கு கேஜரிவால் பதிலளித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்தப் பதிவில், "உங்களுக்கு எனது ஆடை பிடிக்கவில்லையென்றால் பரவாயில்லை. மக்களுக்கு பிடித்திருக்கிறது. எனது ஆடையைக் குறித்துப் பேசுவதை விட்டுவிட்டு, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பது, விவசாயிகளின் கடனை ரத்து செய்வது, கறைபடிந்த அமைச்சர்கள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற தேர்தல் வாக்குறுதிகள் மீது கவனம் செலுத்துங்கள்" என தெரிவித்துள்ளார்.