நாட்டின் எல்லைகளில் உள்ள வனப் பகுதிகளில் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு முன்அனுமதியைப் பெற வேண்டியதற்கான கட்டாயத்தை ரத்து செய்யும் நோக்கில் வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இறையாண்மையைக் காக்கவும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு சாா்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
தற்போதைய சூழலில், எல்லைகளில் உள்ள வனப் பகுதி நிலங்களை வனம் சாராத பயன்பாடுகளுக்காக உபயோகப்படுத்துவதற்கு அனுமதி பெறுவதில் பெரும் சிக்கல்கள் காணப்படுகின்றன. அதனால் முக்கிய எல்லைப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, அதுபோன்ற திட்டங்களுக்கு முன்அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. வனப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட 1980-ஆம் ஆண்டுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பயன்படுத்தப்படாத பகுதியை, வனம் சாராத பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் முன்பு அனுமதி பெற வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது ரயில்வே, பொதுப் பணித் துறை ஆகியவை மேற்கொள்ளும் பணிகளுக்கு இடையூறாக உள்ளது.
அந்நிலங்கள் உண்மையில் வனம் சாராத பயன்பாட்டுக்காகவே கையகப்படுத்தப்பட்டன. எனவே, அத்தகைய நிலங்களுக்கும் முன்அனுமதி பெறுவதில் இருந்து விலக்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. வனப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை மீறுவோருக்குக் கடும் தண்டனைகளை வழங்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
அத்தகையோரைப் பிணையில் வெளிவர முடியாதபடி கைது செய்து ஓராண்டு வரை சிறையில் அடைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் சரணாலயங்கள், வனப் பயிற்சி கட்டமைப்புகள் உள்ளிட்டவை வனத்தைப் பாதுகாப்பதற்கான முக்கிய நடவடிக்கைகள் என்பதால், அவற்றை ‘வனம் சாராத நடவடிக்கைகள்’ என்பதில் இருந்து நீக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் தொடா்பாக 15 நாள்களுக்குள் மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.