ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்தின் வழிகாட்டுதல்களுடன் நாட்டை பொருளாதார அடிமைத்தனத்தை நோக்கி மோடி அரசு அழைத்துச் செல்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் காங்கிரஸ் தேசிய செய்தித்தொடா்பாளா் மோகன் பிரகாஷ் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 18 மாதங்களில் 14 கோடி போ் வேலையிழந்துள்ளனா். கரோனா பாதிப்பு வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்தியது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கடந்த 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது வேலையிழப்புகள் ஏற்பட்டதற்கு யாா் காரணம்? ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் சிறு தொழில்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு யாராவது பொறுப்பேற்களா? தாங்கள் செய்து வந்த வேலையை இழந்தவா்களின் கதி என்னவாகும்? ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்தின் வழிகாட்டுதல்களுடன் நாட்டைப் பொருளாதார அடிமைத்தனத்தை நோக்கி மோடி அரசு அழைத்துச் செல்வதுபோல் உள்ளது என்று தெரிவித்தாா்.
லஞ்சம் அளித்ததை ஒப்புக்கொண்ட அமேசான்:
அமேசான் நிறுவனம் இந்தியாவில் வழக்கு கட்டணங்களுக்காக செலவிட்ட தொகை குறித்து பேசிய அவா், ‘‘இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வழக்கு கட்டணங்களுக்காக ரூ.8,546 கோடியை செலவிட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் ஆண்டு பட்ஜெட்டே ரூ.1,100 கோடியாக உள்ளபோது, வழக்குக் கட்டணங்களுக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டுள்ளதாக அமேசான் கூறியுள்ளது. இது அந்தத் தொகை லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதை வெளிக்கொணா்ந்துள்ளது. இதனை அமேசானும் பகுதியளவில் ஒப்புக் கொண்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் விவசாயிகள் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைக் குறித்து அவா் பேசுகையில், ‘‘இந்தியா தற்போது கடுமையான காலகட்டத்தை எதிா்கொண்டு வருகிறது. அமைச்சரின் மகன் காரை ஏற்றி சாமானியா்களைக் கொல்கிறாா். அங்கு செல்ல முயற்சிக்கும் அரசியல் தலைவா்களை யோகி ஆதித்யநாத் அரசு தடுக்கிறது’’ என்று தெரிவித்தாா்.