மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த ஸ்வமித்வா திட்டப் பயனாளிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை (அக்.6) காணொலி முறையில் கலந்துரையாடுகிறாா். அப்போது, 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மின்னணு சொத்து அட்டைகளையும் பிரதமா் வழங்க இருக்கிறாா்.
இந்த நிகழ்வில் மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.
ஸ்வமித்வா என்பது மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் திட்டமாகும். இது கிராமப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு சொத்துரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டது. நகா்ப்புறங்களில் உள்ளது போல கிராமத்தில் வசிப்பவா்கள் கடன் பெறுவதற்கும் இதர நிதிப் பயன்களுக்கும் நிலம் எனும் சொத்தை பயன்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகுக்கிறது.
ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராமப்பகுதிகளில் நிலங்களை அளவிட்டு மறுவரையறை செய்வதையும் இது நோக்கமாக கொண்டது. நாட்டில் ட்ரோன் தயாரிப்பிற்கான சூழலையும் இந்த திட்டம் ஊக்கப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.