உத்தரப் பிரதேச அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை மீறாமல், லக்கிம்பூர் செல்வோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது.
இதையும் படிக்க | லக்கிம்பூர் செல்ல ராகுலுக்கு அனுமதி மறுப்பு
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று லக்கிம்பூர் கேரி செல்லவுள்ளனர்.
ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக ராகுல் உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்வதற்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில், 144 தடை உத்தரவு என்பது 5 பேருக்கு மேல் செல்பவர்களுக்கு மட்டுமே, நாங்கள் 3 பேர் மட்டுமே செல்லவுள்ளோம். அதற்கான கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வேலை அழுத்தத்தை உருவாக்குவது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.