பெங்களூரு: கர்நாடக மாநிலம் கரோனா பெருந்தொற்றிலிருந்து மெல்ல விடுபட்டு வருவதை எடுத்துக்காட்டும் வகையில், கடந்த 7 நாள்களாக 13 மாவட்டங்களில் ஒரு கரோனா பலியும் பதிவாகவில்லை.
மாநிலத்தில் கரோனா உறுதியாகும் விகிதம் 0.53 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் கரோனா பரவல் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள், திரையரங்குகள் திறக்க உத்தரவிட்டும், இரவு நேர ஊரடங்கை தளர்த்தியும் உத்தரவிட்டுள்ளது. நவராத்திரி விடுமுறைக்குப் பிறகு துவக்கப் பள்ளிகளையும் திறக்க திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. பாம்பை ஏவி மாமியார் கொலை: குற்றவாளிக்கு ஜாமீன் தர மறுத்த உச்ச நீதிமன்றம்
மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி வாய்ந்த 81 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அவர்களில் 36 சதவீதம் பேர் இரண்டாவது தவணை செலுத்திக் கொண்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், கர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் கடந்த 7 நாள்களில் கரோனா பலி பதிவாகவில்லை என்றும், இதர மாவட்டங்களிலும் பலி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதாகவும் ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் கரோனா பாதிப்பும் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த செப்டம்பர் முதல வாரத்தில் மட்டும் 5,612 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இது அக்டோபர் முதல் வாரத்தில் 3,676 ஆகக் குறைந்துள்ளது.