ஹரியாணாவில் வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பாஜக எம்.பி.யின் கார் மோதியதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியாணா, பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஹரியாணா மாநிலம் நரேன்கர்க் பகுதிக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜக எம்.பி. நயாப் சைனி மற்றும் எம்எல்ஏ சந்தீப் சிங் ஆகியோர் வரவிருந்தனர். இதனால் அங்கு காவல்துறையினர் அதிகமாக குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கார் ஒன்று வேகமாக வந்து விவசாயிகளின் மீது மோதியுள்ளது. இதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகனத்தின் ஓட்டுநருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு செய்யாவிட்டால் அக்டோபர் 10 ஆம் தேதி காவல்நிலையத்தை சுற்றி வளைப்பதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் மீது பாஜக அமைச்சரின் மகனின் கார் மோதி விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதே போன்றதொரு சம்பவம் ஹரியாணாவிலும் நிகழ்ந்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.