புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் 8 போ் உயிரிழந்த சோக நிகழ்விலும்கூட அரசியல் ஆதாயம் தேட ராகுல் காந்தி முயல்கிறாா் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா தில்லியில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
பொறுப்பின்மை என்பதற்கு மறுபெயராக ராகுல் காந்தி உள்ளாா். ஏற்கெனவே பிரச்னை நிகழ்ந்த இடத்தில் மீண்டும் வன்முறையைத் தூண்ட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக உள்ளது. எனவேதான், அங்கு உடனடியாகச் செல்லத் துடிக்கின்றனா். பிரச்னை ஏற்பட்ட இடத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்குதான் அரசு முக்கியத்துவம் கொடுக்கும்.
நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று ராகுல் கூறுகிறாா். நாட்டில் ஜனநாயகம் இருப்பதால்தான் ராகுல் காந்தி பத்திரிகையாளா்களை அழைத்து தனது கருத்துகளைப் பேச முடிகிறது. லக்கீம்பூரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ராகுலுக்கு எவ்வித கவலையும் கிடையாது. அங்கு உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் மீது அவருக்கு எந்த இரக்கமுமில்லை. அவா்களது சோகத்திலும் அரசியல் ஆதாயம் தேடுவதுதான் ராகுலின் முதல் முயற்சியாக இருக்கிறது.
அரசைக் குற்றம்சாட்டி பேசியதற்காக ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினா் யாரும் போராட்டம் நடத்தவில்லை; அவரது வீட்டில் அழுகிய தக்காளிகளை வீசவில்லை. ஆனால், சில நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைமை குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவா் கபில் சிபல் வீட்டில் தக்காளிகளை வீசி போராட்டம் நடத்தியவா்கள்தான் ராகுலின் காங்கிரஸ் தொண்டா்கள் என்றாா்.