ஜம்மு - காஷ்மீரில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று காலை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் இரண்டு ஆசிரியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் இன்று காலை ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது பள்ளிக்குள் புகுந்த இரண்டு தீவிரவாதிகள், தலைமை ஆசிரியர் சுக்விந்தர் கவுர் மற்றும் ஆசிரியர் தீபக் ஆகியோரை அறைக்கு வெளியே அழைத்து வந்துள்ளனர்.
அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத விதமாக இருவரையும் துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர்.
பலத்த காயமடைந்த இரண்டு ஆசிரியர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் பலியாகினர்.