ஷாருக் கான் மகனுக்கு பிணை வழங்க எதிர்ப்பு; போதை தடுப்பு பிரிவு சொன்ன காரணம் என்ன?

ஆர்யன் கானை தொடர்ந்து காவலில் வைத்தால்தான் சக குற்றம்சாட்டப்பட்டவரான அசித் கானுடன் சேர்த்து அவரை குறுக்கு விசாரணை செய்ய முடியும் என போதை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ஆர்யன் கான்
ஆர்யன் கான்

உல்லாச கப்பலில் போதை பொருள் சிக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சக குற்றம்சாட்டப்பட்டவரான அசித் கான்தான், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு போதை பொருள் வழங்கியதாக போதை தடுப்பு பிரிவு மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆர்யன் கானுக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்து போதை தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்தது.

உல்லாச கப்பலில் சோதனை நடத்தப்பட்டபோது, ஆர்யன் கான் போதை பொருளை உட்கொள்ளவில்லை என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. போதை தடுப்பு பிரிவு சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், "இந்த வழக்கில் பல தொடர்புகள் உள்ளன. ஒட்டு மொத்த சதியையும் திட்டத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். இந்த வழக்கை தனியாக பார்க்கக் கூடாது. 

உண்மையான குற்றவாளியையும் ஒட்டு மொத்த கும்பலையும் பிடிக்க வேண்டும் என்பதே போதை தடுப்பு பிரிவின் நோக்கம். அப்படி செய்யவில்லை எனில், இது தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆர்யன் கானை தொடர்ந்து காவலில் வைத்தால்தான் சக குற்றம்சாட்டப்பட்டவரான அசித் கானுடன் சேர்த்து அவரை குறுக்கு விசாரணை செய்ய முடியும். சோதனை நடத்தப்பட்டப்போது, ஆர்யன் கான் போதை பொருளை உட்கொள்ளவில்லை. 

ஆனால், அவரின் வாட்ஸ்அப் உரையாடல்களின் மூலம் சர்வதேச கும்பல் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அவரை விசாரிக்க வேண்டும்" என்றார். இந்த வழக்கில், இதுவரை ஷாருக் கான் எந்த வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

உல்லாசக் கப்பலான ‘எம்பிரஸ்’ மும்பையில் இருந்து அக்டோபர் 2ஆம் தேதி சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர்  அந்தக் கப்பலில் ஏறினர்.

கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிர்ந்தனர். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள், சினிமா, ஃபேஷன், பிஸினஸ் துறையைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்து உள்ளனர்.

ஹாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்பட எட்டு பேரை இன்று வரை காவலில் எடுக்க மும்பை நீதிமன்றம் போதை தடுப்பு பிரிவுக்கு அனுமதி வழங்கியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com