திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் நடை திறப்புக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கரோனா அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு நிகழாண்டு பக்தர்கள் பாதுகாப்புடன் தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கேரள அரசு புதன்கிழமை தெரிவித்தது.
இதுதொடர்பாக கேரள சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது மாநில தேவஸம் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை கூறியதாவது:
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் சீசனையொட்டி பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் கோயிலிலும், கோயில் வளாகத்திலும் செய்யப்பட்டுள்ளன.
அரசின் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளுடன் இணைந்து கூட்டு நடவடிக்கையாக பம்பை, பத்தனம்திட்டா, எரிமேலி ஆகிய இடங்களில் மருத்துவ வசதிகள், பரிசோதனை வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனினும் கோயிலில் பக்தர்கள் எத்தனை பேரை தரிசனம் செய்ய அனுமதிப்பது, தற்போதைய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைத் தளர்த்துவது ஆகியவை குறித்து இன்னமும் அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை.
சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள், தேவஸம்போர்டு, கோயில் உயர்நிர்வாகக் குழு ஆகியவை சபரிமலை சீசனையொட்டி தேவையான ஆயத்த நடவடிக்கைகளைச் செய்து வருகின்றன. அதுமட்டுமின்றி சீசன் காலமான இரண்டுமாத காலத்துக்கு போக்குவரத்து வசதிகள், கோயில் வளாகம் மற்றும் அருகில் உள்ள மையங்களில் குடிநீர், உணவு, கழிவறை வசதிகள் கிடைக்கச் செய்வது தொடர்பாகவும் அரசு அதிகாரிகளுக்கான கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.
நிகழாண்டு சபரிமலை சீசன் நவம்பர் 16-ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக கடந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காலத்தின்போது கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கும், கோயிலுக்கு வருவதற்கும் கடும் நிபந்தனைகளை அரசு விதித்திருந்தது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு வர அனுமதிக்கப்பட்டனர்.