புது தில்லி: வருமான வரித்துறையினர், இரண்டு குழும நிறுவனங்களில் நடத்திய சோதனையில், கணக்கு காட்டாமல் மறைக்கப்பட்ட ரூ.250 கோடி வருவாய் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மண்டலம் மற்றும் மேற்கு வங்கத்தில் சிமெண்ட் தயாரிப்பு மற்றும் ரயில்வே ஒப்பந்தங்களைப் பெற்று மேற்கொண்டு வந்த இரண்டு குழுமங்களில், அக்டோபர் 5ஆம் தேதி கொல்கத்தா, குவகாத்தி, ராங்கியா, ஷில்லாங், பாட்னா ஆகிய பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக மத்திய வரிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்த வருமான வரித்துறை சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் ரூ.250 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் ரூ.51 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 9 வங்கிப் பெட்டகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சிமெண்ட் தயாரிப்புத் தொழிற்சாலையில், வருமானத்தைக் குறைத்துக்காட்டி, ஷெல் நிறுவனங்கள் மூலம் அந்த வருவாயை மீண்டும் தனது நிறுவனத்துக்கேக் கொண்டு வந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அசாம், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான ரயில்வே ஒப்பந்தங்களை எடுத்துச் செய்து வரும் குழுமத்தில் நடத்திய சோதனையில், ஏராளமான நிலம் மற்றும் சொத்துக்கள் விற்பனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு மட்டும் ரூ.110 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.