லக்கிம்பூர் சம்பவத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசின் மீது கடுமையான விமரிசனங்களை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், மாநில அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் நான்கு விவசாயிகள் உள்பட எட்டு பேர் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், "உத்தரப் பிரதேச அரசு இதுவரை எடுத்த நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. பொறுப்பான அரசு மற்றும் காவல்துறையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிர தன்மை கொண்டுள்ளது" என தலைமை நீதிபதி என். வி. ரமணா தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், "நீங்கள் இதன்மூலம் சொல்ல வரும் செய்தி என்ன? இந்த சாதாரண சூழ்நிலைகளில் கூட ... காவல்துறை உடனடியாகச் சென்று குற்றவாளியைக் கைது செய்யாதா? விவகாரம் சரியான திசையில் சென்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. சொல்கிறீர்களே தவிர செயல்களில் எதுவும் தெரியவில்லை.
மற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை எப்படி நடத்துகிறீர்களோ, அதேபோல் இந்த வழக்கிலும் நடத்த வேண்டும். இதற்கு சிபிஐ விசாரணை தீர்வளிக்காது. சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையை பார்த்தோம். டிஐஜி, எஸ்பி என பலர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அனைவரும் உள்ளூரை சேர்ந்தவர்கள். அனைவரும் உள்ளூர் அலுவலர்களாக இருந்தால் இப்படிதான் நடக்கும்" என்றார்.
விவசாயிகள் கொலை வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராதான் குற்றம் சாட்டப்பட்டவர். விவசாயிகள் அமைதியான முறையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடிபட்டுக்கொண்டிருந்தபோது, அவர்கள் மீது காரை ஏற்றியதாக விவசாயிகள் முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளனர்.
அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இன்று நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், காவல்துறையினர் விசாரணைக்கு அவர் செல்லவில்லை.