உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற அன்ஷு மாலிக் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சரிதா மோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், “உலக மல்யுத்த போட்டி 2021-ல் வெள்ளி வென்ற அன்ஷு மாலிக் மற்றும் வெண்கலம் வென்ற சரிதா மோர் ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்த சிறப்பு வாய்ந்த விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்,”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், 16 தங்க பதக்கங்கள் உள்ளிட்ட 40 பதக்கங்களுடன் உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நமது துப்பாக்கி சுடும் வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்! 16 தங்க பதக்கங்கள் உள்ளிட்ட 40 பதக்கங்களுடன் உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியின் பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அணிக்கு பாராட்டுகள் மற்றும் எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்.
பல்வேறு வளர்ந்து வரும் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு இந்த வெற்றி ஊக்கமளிக்கும்,” என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.