காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் சுமார் 28 ஆண்டுகளுக்கு முன் தனது பெற்றோரை கொடூரமாகக் கொலை செய்த 65 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்க காலதாமதமானதற்கு, குற்றவாளி, மனநலம் பாதிக்கப்பட்டு 25 ஆண்டுகள் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது காரணமாகக் கூறப்படுகிறது.
காசர்கோடு கூடுதல் அமர்பு நீதிமன்ற நீதிபதி உன்னி கிருஷ்ணன் அளித்த தீர்ப்பில், 1993ஆம் ஆண்டு மார்ச் 22ல், தனது பெற்றோரைக் கொன்ற வழக்கில், கூலித் தொழிலாளியாக இருந்த சதாசிவம் குற்றவாளி என்று கூறினார்.
இதையும் படிக்கலாமே.. 8 நாள்களுக்குப் பின் சிசிடிவி கேமராவில் பதிவானது புலி
வானொலியில் சத்தத்தைக் குறைக்குமாறு, சதாசிவத்தின் தாய் கூறியதால் எழுந்த வாக்குவாதத்தில், சதாசிவம் கோடாரியை எடுத்து, தாய் மற்றும் தந்தையை வெட்டிக் கொன்றுள்ளார். இதனை, சதாசிவத்தின் மனைவி மற்றும் அப்போது 4 மற்றும் 5 வயதில் இருந்த அவரது பிள்ளைகளும் பார்த்துள்ளனர். இந்த வழக்கில் இவர்கள் முக்கிய சாட்சிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டு விசாரணைக்குள்படுத்தப்பட்ட சதாசிவம் மனநிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு 2018 வரை சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகுதான் விசாரணை தொடங்கி, தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.