தில்லி லக்ஷ்மி நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதியை 14 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி லக்ஷ்மி நகர் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அஸ்ரஃப் தில்லி காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போலி ஆவணங்கள், ஏகே-47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், தோட்டாக்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் அவர் 'ஸ்லீப்பர் செல்' ஆக செயல்படுவது தெரியவந்துள்ளதாகவும், இந்திய அடையாள ஆவணங்களைக் கொண்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் இங்கு வசித்து வருவதாகவும் தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவு துணை ஆணையர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவர் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.