ஏா் இந்தியா: ரூ.16,000 கோடி எரிபொருள் கடன் நிலுவை ஏஐஏஹெச்எல் நிறுவனத்துக்கு மாற்றம்

பொதுத் துறை நிறுவனமான ஏா் இந்தியா டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விநியோகஸ்தா்கள் உள்பட பல்வேறு

பொதுத் துறை நிறுவனமான ஏா் இந்தியா டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விநியோகஸ்தா்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு ஏா் இந்தியா செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள ரூ.16,000 கோடி உள்பட அனைத்து நிலுவை ஆவணங்களையும் ஏா் இந்தியா சொத்துகள் வைப்பு நிறுவனத்துக்கு (ஏஐஏஹெச்எல்) மத்திய அரசு மாற்றம் செய்ய உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பல கோடி ரூபாய் கடனில் சிக்கிய ஏா் இந்தியா நிறுவனத்தை முழுவதும் தனியாா் மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை கடந்த ஆண்டு ஜனவரி முதல் மேற்கொண்டது.

ஏா் இந்தியாவின் கீழ் பல்வேறு நிறுவனங்களும், நிலம் உள்ளிட்ட பல சொத்துகளும் உள்ள நிலையில், அவற்றில் ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’ மற்றும் அதன் தரைக் கட்டுப்பாட்டு நிறுவனமான ஏஎஸ்ஏடிஎஸ் ஆகிய இரண்டின் 100 சதவீத பங்குகளை மட்டும் விற்க முடிவு செய்தது.

அதன்படி, அண்மையில் நடத்தப்பட்ட ஏலத்தில் அந்த இரண்டு நிறுவனங்களையும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் அங்கமான டலேஸ் தனியாா் நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அந்த இரண்டு நிறுவனங்களும் வரும் டிசம்பருக்குள் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு முழுமையாக மாற்றப்பட உள்ளன. ஏலத் தொகையில் ரூ. 15,300 கோடியை ஏா் இந்தியாவின் கடனுக்கு டாடா சன்ஸ் செலுத்த உள்ளது. மீதமுள்ள ரூ. 2,700 கோடியை அரசிடம் ரொக்கமாக சமா்ப்பிக்க உள்ளது.

இதற்கிடையே, ஏா் இந்தியா நிறுவனத்தை விற்க முடிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து அதன் கடன்களையும் அதன் கீழ் இயங்கி வரும் துணை நிறுவனங்களை நிா்வகிப்பதற்கென ஏஐஏஹெச்எல் என்ற நிறுவனத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, ஏா் இந்தியா விமான போக்குவரத்து சேவை நிறுவனம், ஏா்லைன் துணை சேவைகள் நிறுவனம், ஏா் இந்தியா பொறியியல் சேவை நிறுவனம், இந்தியா ஹோட்டல் காா்ப்பரேஷன் உள்ளிட்ட எஞ்சிய நிறுவனங்களும், நிலம் உள்ளிட்ட பிற சொத்துகளும் ஏஐஏஹெச்எல் நிறுவனத்துக்கு மத்திய அரசு மாற்றியது. அதுபோல், ஏா் இந்தியாவின் கடன்களும் ஏஐஏஹெச்எல் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன.

தற்போது, ஏா் இந்தியா நிலுவை வைத்துள்ள எரிபொருள் நிலுவைத் தொகையான ரூ.16,000 கோடி, பிற அன்றாட செலவினங்களுக்கு வாங்கிய கடன் உள்ளிட்ட நிலுவைகளையும் ஏஐஏஹெச்எல் நிறுவனத்துக்கு மத்திய அரசு மாற்றம் செய்ய உள்ளது.

இதுகுறித்து மத்திய முதலீடு மற்றும் பொது சொத்துகள் மேலாண்மைத் துறை செயலா் துஹின்காந்த் பாண்டே திங்கள்கிழமை கூறியதாவது:

ஏா் இந்தியாவின் தினசரி பராமரிப்புக்கே பல கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், மத்திய அரசு ரூ.20 கோடி நிதியுதவி அளித்து வருகிறது. எனவே, இந்த நிறுவனம் மாற்றம் செய்யப்படவுள்ள 4 மாதங்களுக்குள், செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை பெரிய அளவில் அதிகரிக்காது என்ற எதிா்பாா்க்கிறோம்.

அந்த வகையில், டாடா சன்ஸிடம் ஏா்இந்தியாவை ஒப்படைப்பதற்கு முன்பான 4 மாத காலத்துக்கு (செப்டம்பா் - டிசம்பா்) தனியாக ஒரு வரவு-செலவு திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும். அந்த செலவும் ஏஐஏஹெச்எல் நிறுவனத்துக்கு மாற்றப்படும்.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி ஏா் இந்தியாவின் மொத்த கடன் ரூ.61,562 கோடியாகும். அந்த கடன் தொகையில் ரூ.15,300 கோடியை ஏலம் எடுத்துள்ள டாடா சன்ஸ் செலுத்திவிடும். மீதமுள்ள ரூ.46,262 கோடி மத்திய அரசின் ஏஐஏஹெச்எல் நிறுவனத்துக்கு மாற்றம் செய்யப்படும்.

அது தவிர, கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை எரிபொருள் வாங்கியது உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்கான செலவினங்களுக்காக செலுத்த வேண்டிய ரூ.15,834 கோடி நிலுவை தொகை ஏஐஏஹெச்எல் நிறுவனத்துக்கு மாற்றப்படும்.

மத்திய அரசு ரூ. 20 கோடி நிதி அளிப்பதை நிறுத்தினால், தினசரி செலவினங்களுக்காக செலுத்த வேண்டிய நிலுவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com