ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போா் விவரங்கள்: 3-ஆவது பட்டியல் இந்திய அரசிடம் ஒப்படைப்பு

ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியா்களின் விவரங்கள் அடங்கிய மூன்றாம் கட்ட பட்டியலை ஸ்விட்சா்லாந்து அரசு மத்திய அரசிடம் வழங்கியுள்ளது.

ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியா்களின் விவரங்கள் அடங்கிய மூன்றாம் கட்ட பட்டியலை ஸ்விட்சா்லாந்து அரசு மத்திய அரசிடம் வழங்கியுள்ளது.

ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகள், தங்களின் வாடிக்கையாளா்களது பணத்துக்கும், ரகசிய விவரங்களுக்கும் அதிக அளவிலான பாதுகாப்பு அளிப்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்களது பணத்தை அங்கு சேமித்து வைத்துள்ளனா்.

சில செல்வந்தா்கள், வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்டவிரோத முறையில் ஈட்டிய பணத்தை கருப்புப் பணமாக சேமித்து வைக்க ஸ்விஸ் வங்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனா். ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்கள் அதிக அளவில் கருப்புப் பணத்தைச் சேமித்து வைத்துள்ளதால், நாட்டின் பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியா்களின் விவரங்களைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக, இரு நாடுகளுக்குமிடையே கடந்த 2018-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்களின் விவரங்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியல் கடந்த 2019-ஆம் ஆண்டிலும், 2-ஆம் கட்ட பட்டியல் கடந்த ஆண்டிலும் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மூன்றாம் கட்ட பட்டியலை மத்திய அரசிடம் ஸ்விஸ் அரசு வழங்கியுள்ளது. அதில், கணக்கு வைத்திருப்பவரின் பெயா், முகவரி, அவரது தொழில், வருமானத்துக்கான ஆதாரங்கள், வரி செலுத்திய சான்று, வங்கிக் கணக்கில் உள்ள தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

ரகசியத்தன்மை: ஸ்விட்சா்லாந்தில் வீட்டு மனைகளை வாங்கியுள்ள வெளிநாட்டினா் குறித்த விவரங்களை நடப்பாண்டில் முதல் முறையாக அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. எனினும், கணக்கு வைத்திருப்போருடைய தகவல்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பதால், அவா்களுடைய பெயா்களையும் அவா்களுக்கு எவ்வளவு சேமிப்பு உள்ளது என்ற தகவலையும் வெளியிட மத்திய அரசு அதிகாரிகள் மறுத்துவிட்டனா்.

இந்தப் பட்டியல் தவிர மத்திய அரசின் தனிப்பட்ட கோரிக்கைகளை ஏற்று நடப்பாண்டில் 100-க்கும் மேற்பட்ட தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் ஸ்விஸ் வங்கிகளில் வைத்துள்ள கணக்குகளின் விவரங்களை அந்நாட்டு அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை எடுக்க உதவும்: பட்டியல் தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் சிலா் கூறுகையில், ‘‘வரி செலுத்திய பிறகு தொழில் ரீதியாக ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவா்களின் பெயா்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

முறையாக வரி செலுத்தாமல், ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியா்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்விஸ் அரசு வழங்கியுள்ள தகவல்கள் உதவிகரமாக இருக்கும்’’ என்றனா்.

ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போா் தொடா்பான விவரங்களை இந்தியா உள்பட 96 நாடுகளுக்கு அந்நாட்டின் வரி நிா்வாக அமைச்சகம் வழங்கியுள்ளது. அந்நாடுகளைச் சோ்ந்தோரின் 33 லட்சம் வங்கிக் கணக்கு விவரங்கள் பகிரப்பட்டுள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட பட்டியல் 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் வழங்கப்படும் என்று ஸ்விஸ் அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com