கோவேக்ஸின் தடுப்பூசியை 2 வயது முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு அவசர காலத்தில் பயன்படுத்த மருத்துவ நிபுணா் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஹைதாராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், 2 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு பயன்படுத்துவதற்காக, கோவேக்ஸின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி, மொத்தம் 3 கட்ட பரிசோதனைகளில் 2 கட்ட பரிசோதனைகளை நிறைவு செய்துள்ளது. பரிசோதனை முடிவுகளுடன் இந்தத் தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி கேட்டு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம்(சிடிஎஸ்சிஓ) பாரத் பயோடெக் நிறுவனம் இந்த மாதத் தொடக்கத்தில் விண்ணப்பித்திருந்தது.
அந்த நிறுவனம் சமா்ப்பித்திருந்த பரிசோதனை அறிக்கை விவரங்களை மருத்துவ நிபுணா் குழு திங்கள்கிழமை ஆய்வு செய்தது. அதைத் தொடா்ந்து, அந்தக் குழு வெளியிட்ட அறிக்கையில், ‘கோவேக்ஸின் தடுப்பூசியை சில நிபந்தனைகளுடன் சிறாா்களுக்கு அவசர காலத்தில் பயன்படுத்த மருத்துவ நிபுணா் குழு பரிந்துரை செய்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தக் குழு தனது பரிந்துரைகளை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கும்(டிசிஜிஐ) அனுப்பி வைத்துள்ளது.