தில்லி லட்சுமி நகர் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஆயுதங்களும், வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
முகமது அஷ்ரஃப் (எ) அலிக்கு ஐஎஸ்ஐ அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், மேலும், தில்லியில் தாக்குதல் நடத்தும் நோக்கில் அவர் இங்கு தங்கியிருந்தாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஷ்ரஃப், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதும் அங்கிருந்து வங்கதேசம் வழியாக இந்தியா வந்து கடந்த 10 ஆண்டுகளாக தில்லியில் வசிப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துணை ஆணையர் பிரமோத் சிங் குஷ்வாஹா தெரிவித்தார்.
அஷ்ரஃப், பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அவரை தேர்வு செய்து 6 மாதங்கள் பயிற்சி அளித்துள்ளது. தம்மை ஒரு மதப்பிரசாரகர் என்று கூறிக் கொண்டு தில்லியில் தங்கியிருந்த அஷ்ரஃப்பை திங்கள்கிழமை இரவு கைது செய்ததாக துணை ஆணையர் பிரமோத் சிங் தெரிவித்தார்.
ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த நஸீர் என்பவருடன் அஷ்ரஃபுக்கு தொடர்பு இருந்ததாகவும் அவர் மூலம் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவது குறித்த தகவல்களைத் தெரிந்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் அவர் 6 முறைக்கு மேல் தனது இருப்பிடத்தை மாற்றி வந்துள்ளார். அவர் எந்த இடத்திலும் அதிக நாள்கள் தங்கியிருப்பதில்லை என்பதும் ஆவணங்களைத் தயாரிக்க தில்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.
முகமது அஷ்ரஃப் இந்தியரைப் போலவே தில்லியில் வாழ்ந்து வந்துள்ளார். அவரது இருப்பிடத்திலிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி, வெடிமருந்துகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அவர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதங்கள், வெடி மருந்துகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
போலீஸ் காவல்: முகமது அஷ்ரஃப்பை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் பங்கஜ் சர்மா முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.