கேரளத்தில் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற விரைவில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இது தொடர்பாக கேரள சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கேள்வி எழுப்பியிருந்தார். கேரளத்தில் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக முதல்வர் அளித்திருந்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
"குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது இடதுசாரி அரசின் கொள்கை அல்ல. இச்சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்களுக்கு எதிராக 836 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் இதுவரை 13 வழக்குகள் மட்டுமே வாபஸ் பெறப்பட்டுள்ளன. சபரிமலை விவகாரம் தொடர்பான போராட்டங்களில் 2,636 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றை வாபஸ் பெற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?' என்று வி.டி.சதீசன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
இந்த இரு விவகாரங்கள் தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகளில் குற்றவியல் தன்மை இல்லாதவற்றை வாபஸ் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசு ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில், தங்கள் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தன்மை மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து பரிசீலிக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறைத் தலைவர்களுக்கு மாநில டிஜிபி ஆணை பிறப்பித்திருந்தார். இந்த வழக்குகள் தொடர்பாக தகவல் சேகரிக்கவும் அவற்றின் தன்மை மற்றும் தற்போதைய நிலை குறித்து பரிசீலிக்கவும் மாநில காவல் துறையின் குற்றப்பிரிவு ஐஜி, சிறப்புப் பிரிவு மற்றும் குற்ற ஆவணக் காப்பகம் ஆகியவற்றின் கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு தேவைப்படும் நடவடிக்கைகள் குறித்து தகவல் திரட்டும் பணியும் இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒவ்வொரு வழக்கும் தனித்தனியாகப் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 321-ஆவது பிரிவின்படி நீதிமன்றத்தின் ஒப்புதலின்படியே வழக்குகளை வாபஸ் பெற முடியும்.
இந்த விவகாரத்தில் அரசுக்கு ஓர் எல்லை உள்ளது. ஏனெனில் இது நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகும். அதே வேளையில் இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் முடிக்க வேண்டிய நடைமுறைகளை விரைவாக முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார்.