கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நாட்டில் புதிதாக 157 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவலுக்கு அந்த அமைச்சகம் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தேசிய மருத்துவ ஆணையத்திடம் உள்ள தரவுகளின்படி, நாட்டில் 286 அரசு மருத்துவக் கல்லூரிகள், 268 தனியாா் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 554 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்காக சுகாதார அமைச்சகத்தின் மருத்துவக் கல்வி பிரிவு மத்திய நிதியுதவி திட்டத்தை (சிஎஸ்எஸ்) அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் புதிதாக 157 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க 3 கட்டங்களாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.17,691 கோடி செலவிட்டுள்ளது.
நாட்டில் மருத்துவப் படிப்பு இடங்களை அதிகரிப்பதற்காக ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்த சிஎஸ்எஸ் திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.2,451 கோடி வழங்கப்பட்டுள்ளது.
2009-10-ஆம் ஆண்டு முதல் இதுவரை முதுநிலை மருத்துவப் படிப்புகளில் புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்கவும் முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை அதிகரிக்கவும் மாநில அரசுளின் மருத்துவக் கல்லூரிகளுக்கு சிஎஸ்எஸ் திட்டத்தின் கீழ் ரூ.1,743.89 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.