உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக துப்பாக்கி பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், தற்போது நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட நபர் வழக்குரைஞரான பூபேந்திரா பிரதாப் சிங் என காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் உடல் அருகே கிடந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
நீதிமன்றத்தில் மூன்றாவது மாடி வளாகத்தில் அரங்கேறிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் உருவாகியது. இதனையடுத்து அங்கு அதிக அளவிலான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்குரைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது பாதுகாப்பின்மையையே காட்டுவதாக சக வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், குற்றவாளி கைது செய்யப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கூறினார். உயிரிழந்த வழக்குரைஞரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.