உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் பலியானோரின் குடும்பத்திற்கு உதவித்தொகையாக தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி புதன்கிழமை தெரிவித்தார்.
உத்தரகண்ட் முழுவதும் கடந்த 4 நாள்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் பெரும் அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் பலியாகியுள்ளனர். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | உத்தரகண்ட் நிலச்சரிவு: 46 பேர் பலி
இதுகுறித்து முதல்வர் புஷ்கர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பெருமளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது காலம் தேவைப்படும். சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நிலச்சரிவால், ஆற்று நீர் கிராமங்களை பாதித்துள்ளது, பாலங்கள் இடிந்துள்ளது.
முதலில் தடைபட்டுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அந்தந்த பகுதியில் இருக்கும் அதிகாரிகளை மக்களுக்கு தடையின்றி உணவு, தண்ணீர் கொடுக்க அறிவுறுத்தியுள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
தற்காலிக மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலா ரூ. 10 கோடி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.”