உத்தரகண்டில் பெய்து வரும் கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 54 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
உத்தரகண்ட் மாநிலத்தில் அதிகப்படியான கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | உத்தரகண்டில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு
முக்கியமாக சாமோலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருவதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த நிலச்சரிவுகளின் மூலம் இதுவரை 54 பேர் வரை பலியாகியிருப்பதாகவும் 11 பேர் மாயமாகியிருப்பதாகவும் அம்மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக நேற்று(அக்.20)கனமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் ரூ.1,09,000 மற்றும் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் இன்று நிலைமையின் தீவிரத்தை அறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரகண்ட் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து வருகிறார்.