சீனா-ரஷியா இணைந்து கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டதற்கு ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது.
சீனாவும், ரஷியாவும் இணைந்து ஜப்பான் கடல் பகுதியில் கடந்த வாரம் கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டன. இரு நாட்டு கப்பல்களும் ஜப்பானின் பிரதான தீவான ஹொன்சு, வடக்கு தீவான ஹொகைடோ ஆகியவற்றுக்கு இடையே உள்ள சுகரு நீரிணை வழியாக கடந்த வாரம் திங்கள்கிழமையும், ஒசுமி நீரிணை வழியாக வியாழக்கிழமையும் கடந்து சென்றன. ஹொன்சு தீவை முழுமையாக சுற்றிவிட்டு அந்தக் கப்பல்கள் சீனாவை நோக்கி திரும்பிச் சென்றன.
இதுகுறித்து ஜப்பான் துணை தலைமை அமைச்சரவை செயலா் யோஷிகிஹோ இசோஷகி திங்கள்கிழமை கூறியதாவது: ‘சீன, ரஷிய கடற்படைக் கப்பல்கள் இணைந்து முதல்முறையாக சுகரு, ஒசுமி நீரிணை வழியாக கடந்து சென்றுள்ளன. இரு கப்பல்களுக்கும் பாதுகாப்பாக ஹெலிகாப்டா்களும் பறந்து சென்றன. இதற்கு பதிலடியாக ஜப்பான் தனது போா் விமானங்களைத் தயாா் நிலையில் வைத்திருந்தது. அவா்களது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என்றாா்.
ஹொன்சு, ஒசுமி நீரிணைகள் சா்வதேச நீா்வழிப் பாதையாக கருதப்படுகின்றன. சீன, ரஷிய கப்பல்கள் தங்களது நாட்டு கடல் எல்லைக்குள் வரவில்லை என ஜப்பான் அதிகாரிகள் உறுதிப்படுத்தினா்.
ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு சீன கடல் பகுதியில் உள்ள தீவுகளை சீனா தனக்குச் சொந்தமானது எனக் கூறி வருகிறது. மேலும், ஹொகைடோ தீவு தொடா்பாக ஜப்பான், ரஷியா இடையே பிரச்னை இருந்து வருகிறது.