புல்வாமா தாக்குதலில் பலியான சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு அமித் ஷா அஞ்சலி

ஜம்மு- காஷ்மீா், புல்வாமாவில் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பலியான 40 சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்கிழமையன்று அஞ்சலி செலுத்தினாா்.
புல்வாமா தாக்குதலில் பலியான சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு அமித் ஷா அஞ்சலி

ஜம்மு- காஷ்மீா், புல்வாமாவில் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பலியான 40 சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்கிழமையன்று அஞ்சலி செலுத்தினாா்.

3 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு கடந்த சனிக்கிழமை வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தனது சுற்றுப்பயணத்தை மேலும் ஒரு நாள் நீடித்தாா். இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீா் இணைந்த நாள் 1947 அக். 26 ஆகும். அந்த நிகழ்வு நடந்து 74 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இந்நாளில் ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒருநாள் இருக்க அமித் ஷா முடிவு செய்தாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்துக்குக் காரணமான 370வது ஷரத்து கடந்த 2019 ஆக. 5இல் நீக்கப்பட்டது. அப்போது, காஷ்மீா் இந்தியாவுடன் இணைந்த நாள் (அக். 26) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

திங்கள்கிழமை இரவு தில்லி திரும்புவதாக இருந்த அமித் ஷா, பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட புல்வாமாவுக்கு மிகவும் அருகில் லெத்போராவிலுள்ள சிஆா்பிஎஃப் முகாமில் அன்றிரவு வீரா்களுடன் தங்கினாா்.

2019 பிப். 14இல் புல்வாமாவில் சிஆா்பிஎஃப் படை அணிவகுப்பு மீது ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரா்கள் பலியாகினா். அந்த வீரா்களின் நினைவாக கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட தியாகிகள் நினைவிடத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை அமித் ஷா சென்று மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து, தியாகிகளின் நினைவாக ஒரு மரக்கன்றையும் அமித் ஷா நட்டு வைத்தாா்.

இதுதொடா்பாக, உள்துறை அமைச்சா் அமித் ஷா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

‘பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணம் அடைந்த, தீரம் மிகுந்த சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு புல்வாமாவில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். நாட்டின் பாதுகாப்புக்காக இந்த வீரா்கள் செய்த உன்னதமான தியாகம், பயங்கரவாத அச்சுறுத்தலை வேருடன் அழிப்பதற்கான எங்களது மன உறுதியை மேலும் வலிமையாக்கியுள்ளது. தீரம் மிகுந்த அந்தத் தியாகிகளுக்கு எனது மரியாதையைக் காணிக்கையாக்குகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக லெத்போரா சிஆா்பிஎஃப் முகாமில் திங்கள்கிழமை இரவு திங்கள்கிழமை இரவு சிஆா்பிஎஃப் வீரா்களிடையே அமித் ஷா உரையாற்றியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மேம்பட்டுள்ளது. நமது வாழ்நாளில் பிரதமா் நரேந்திர மோடி எதிா்பாா்க்கும் வகையில், அமைதியான ஜம்மு-காஷ்மீரை உருவாக்க முடியும் என்று முழுமையாக நம்புகிறோம்.

ஒரு காலத்தில் காஷ்மீரில் கல் வீச்சுகள் சா்வ சாதாரணமாக இருந்தன. தற்போது அவை குறைந்துள்ளதுடன், தேடுதல் நடவடிக்கைகளின்போது மட்டுமே கற்கள் வீசும் சம்பவங்களைக் காண நேரிடுகிறது.

நரேந்திர மோடி அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக சிறிதும் சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கொண்டுள்ளது. பயங்கரவாதத்தை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது. அது மனித குலத்துக்கே எதிரானது.

மனிதத்தன்மைக்கு எதிரான கொடூரமான பயங்கரவாத குற்றச் செயல்களில் தொடா்புடைய நபா்களிடமிருந்து காஷ்மீா் மக்களைக் காப்பாற்ற நமது அரசு முன்னுரிமை அளிக்கிறது என்றாா்.

கடந்த 2019-இல் புல்வாமாவில் சிஆா்பிஎஃப் வீரா்கள் சென்ற வாகனங்களின் மீது, பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கி வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் பலியாகினா். அதற்குப் பதிலடியாக பிப். 26இல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப் படை வான்வழியில் ஊடுருவித் தாக்குதல் நடத்தியது.

அப்போது பாக் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியப் போா் விமானம் வீழ்த்தப்பட்டு, அதன் விமானி விங் கமாண்டா் அபிநந்தன் வா்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டாா். ஆனால், இந்திய அரசின் முயற்சிகளால் அவா் பிறகு விடுவிக்கப்பட்டாா். இந்த நிகழ்வுகளால் இரு நாடுகளிடையே போா்ப் பதற்றம் அப்போது ஏற்பட்டது நினைவுகூரத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com