நீதித் துறை உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது தொடா்பாக மத்திய சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜூ, மாநில சட்ட அமைச்சா்களை அடுத்த மாதம் சந்தித்துப் பேசவுள்ளாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியது:
போதுமான இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பாழடைந்த நிலையில் உள்ள வளாகங்களில் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
இதனை கருத்தில் கொண்டு மாநில சட்ட அமைச்சா்களுடனான பேச்சுவாா்த்தையில் நீதித் துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. மாநிலங்களை இதற்காக வலியுறுத்துவது என்னுடைய பொறுப்பாகும். ஏனெனில், உயா்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு என்பது மாநில அரசுகளின் வரம்புக்குட்டப்பட்டது என்றாா் அவா்.
அனைவரும் நீதித் துறையை எளிதில் அணுகுவதற்கு நீதித் துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது மிகவும் அவசியம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், மாநில சட்ட அமைச்சா்களை சந்திதித்து பேசவுள்ளதாக ரிஜிஜு அறிவித்துள்ளாா்.