காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் விமர்சித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லாலு பிரசாத் யாதவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
வரவிருக்கும் இடைத்தேர்தல் இருக்கட்சிகளிடையே நிலவும் விரிசலை விரிவுப்படுத்திய நிலையில், இந்த கலந்துரையாடல் நிகழ்ந்துள்ளது. மூன்றாண்டு சிறை வாசம் மற்றும் மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு, பிகார் அரசியலுக்கு திரும்பியுள்ள லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரை பொதுவெளி விமரிசித்த லாலு, காங்கிரஸ் கூட்டணியால் என்ன நல்லது நடந்துள்ளது என கேள்வி எழுப்பினார். தாராபூர், குஷேஷ்வர் ஆகிய தொகுதிகளுக்கு சனி்க்கிழமை நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன.
இது, கூட்டணியில் மேலும் உரசலை உண்டாக்கியது. காங்கிரஸ் கூட்டணி குறித்து லாலுவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியால் என்ன நன்மை நடந்துள்ளது" என பதில் அளித்தார்.
காங்கிரஸை விமர்சிப்பதன் மூலம் ராஷ்டிரிய ஜனதா தளம் பாஜகவுக்கு உதவி செய்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் பக்த் சரண் தாஸ் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த லாலு, "நாங்கள் அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டு கொடுத்திருக்க வேண்டுமா? எதற்கு தொகுதியில் தோல்வி அடைந்து டெபாசிட்டை இழப்பதற்கா? பக்த் சரண் ஒரு முட்டாள்" என்றார்.
பிகார் மாநில காங்கிரஸ் தலைவர்கள், லாலு பிரசாத் மீது கோபம் கொண்டிருந்தாலும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடனான உறவை சீர்ப்படுத்தவே சோனியா விரும்புகிறார் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | பெகாஸஸ் விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
சோனியா காந்தி, லாலு பிரசாத் ஆகியோர் நீண்ட காலமாகவே நட்பை பேணி காத்துவருகின்றனர். குறிப்பாக, 2004ஆம் ஆண்டு, இத்தாலியில் பிறந்ததால் சோனியா காந்திக்கு பிரதமர் பொறுப்பு வழங்கக் கூடாது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தபோது, பிரதமராக சோனியா காந்தி வருவதற்கு லாலு ஆதரவு அளித்தார்.