ஆர்யன் கானுடன் செல்ஃபி: மேலும் ஒருவர் கைது
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுடன் செல்ஃபி எடுத்த மற்றொரு நபரையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருக்கிறார்கள்.
கடந்த அக்.3-ஆம் தேதி மும்பை-கோவா சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி விருந்து நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக பயணித்து கோகைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையின் போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 13 பேரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் வேளையில் ஆர்யன் கானுடன் கப்பலிலும் போதைப்பிரிவு அலுவலகத்திலும் வைத்து செல்ஃபி எடுத்த கிரண் கோசாவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் ஆர்யன் கான் கைதான அன்று சொகுசுக்கப்பலில் இருந்த கிரண் நேரடி சாட்சியாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டு புனேவில் ரூ.18 லட்சத்தை ஏமாற்றியதாக கிரண் கோசாவி மீது வழக்கு பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.