பெங்களூரு: ஒரு சிறுமியின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, துரந்தோ விரைவு ரயில் 27 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச சென்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஹௌரா புறப்பட்ட ரயில் 27 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
ஒரு தனி நபருக்காக, இந்திய ரயில்வேயின் ரயில் ஒன்று தாமதமாகப் புறப்பட்டுச் செல்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். சிறுமிக்கு மனிதாபமானத்துடன் உதவி செய்த இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
இது குறித்து ரயில்வே அதிகாரி கூறுகையில், ஜெயநாப் என்ற 5 வயது சிறுமி, துரந்தோ விரைவு ரயிலின் ஏ1 வகுப்பில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தார். ஆனால் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு ஆக்ஸிஜன் உருளை வரவழைக்கப்பட்டு, மூச்சுத் திணறல் சரியானதும், அவர் ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
இதனால், 11 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் 11.27 மணிக்குப் புறப்பட்டது.
இதனை நேரில் பார்த்த அதே ரயில் நிலையத்தில் சரக்கு ரயில்களை இயக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் கேதார்நாத் ரெட்டி கூறுகையில், அந்தச் சிறுமி மருத்துவமனையிலிருந்து நேராக இந்த ரயில் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு, ரயிலில் பயணிக்க திட்டமிட்டிருந்தார்கள். ரயில் நிலையத்துக்கு வந்ததும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மூச்சுத் திணறல் சரியானதும் ரயிலில் பயணித்தார்.
இது குறித்து தனது சுட்டுரையில் பதிவிட்டிருக்கும் கேதார்நாத் ரெட்டி, ரயில்வே ஊழியர்களைப் பாராட்டியதோடு, இது குறித்த விடியோவையும் வெளியிட்டுள்ளார்.