நான்கு வார சிறைவாசத்திற்கு பிறகு விடுதலையான ஆர்யன் கான்

மும்பையை விட்டு வெளியே செல்லக் கூடாது, வெள்ளிக்கிழமைகளில் போதை தடுப்பு பிரிவு முகமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் போன்ற பல நிபந்தனைகளுடன் ஆர்யன் கானுக்கு பிணை வழங்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், கிட்டத்தட்ட நான்று வாரகால சிறைவாசத்திற்கு பிறகு மும்பை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சொகுசு கப்பலில் போதை பொருள் சிக்கிய வழக்கில் வியாழக்கிழமை அவருக்கு பிணை வழங்கப்பட்டது. 

ஆனால், வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி வரை சிறை அலுவலர்களக்கு பிணை குறித்த உத்தரவுகள் கிடைக்காததால், பிணை கிடைத்து இரண்டு நாள்களுக்கு பிறகும் அவர் சிறையில் இருக்க வேண்டியதாயிற்று. இந்நிலையில், இன்று காலை 11 மணி அளவில், பலத்த பாதுகாப்புடன், வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, இன்று காலை சிறை அலுவலர்களுக்கு பிணை உத்தரவு கிடைத்தது. இதையடுத்து, ஆர்யன் கானை விடுவிக்கும் நடைமுறை தொடங்கியது. இன்று காலை முதலே, ஷாருக் கான் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிய தொடங்கினர். 'ஆர்யன் கானை வீட்டுக்கு வரவேற்கிறோம்' என எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தி வீட்டின் முன்பு அவர்கள் காத்து கொண்டிருந்தனர்.

அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ஆர்யன் கான் சார்பாக அவருக்கு பிணை கேட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஹாருக் கானின் நெருங்கிய நண்பரான நடிகை ஜூஹி செளலா, ஆர்யன் கானுக்காக 1 லட்சத்திற்கான பிணை பத்திரத்தில் கையெழுத்திட்டார். சிறைக்கு நேரடியாக அனுப்பப்படும் பிணை உத்தரவு குறித்த உத்தரவில் மும்பை நீதிமன்றம் கையெழுத்திடுவதற்கு முன்பு இந்த நடைமுறை நடைபெற வேண்டும்.

ஆர்யன் கான் அக்டோபர் 2 அன்று சொகுசு கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின்போது போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமை நடத்திய சோதனையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு பின்னர் கிட்டத்தட்ட ஒரு மாதம் சிறையில் கழித்தார். மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் அவர் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவராக கருதப்படுகிறார்.

ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அவரிடம் எந்த போதைப்பொருளையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், அவரது வாட்ஸ்அப் உரையாடல்களின் மூலம் அவர் சர்வதேச அளவில் சட்டவிரோத போதை பொருள் ஒப்பந்தத்தில் ஈடுபட்டதும் வெளிநாட்டு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததும் நிரூபிக்கப்பட்டதாக போதை தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மும்பையை விட்டு வெளியே செல்லக் கூடாது, வெள்ளிக்கிழமைகளில் போதை தடுப்பு பிரிவு முகமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் போன்ற 14 நிபந்தனைகளுடன் ஆர்யன் கானுக்கு பிணை வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com