கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் ஓரணியில் நின்று பாஜகவை எதிர்க்க வேண்டும் என மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கோவாவில் அடுத்த ஆண்டு (2022) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 40 இடங்களுக்கு நடைபெற உள்ள இந்தத் தேர்தலில் வெற்றி பெற பாஜகவும், காங்கிரஸும் கடுமையாக மோதி வருகின்றன.
இதையும் படிக்க | முல்லைப்பெரியாறு அணை தமிழத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது: துரைமுருகன்
இந்நிலையில் கோவா முற்போக்கு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாயை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை சந்தித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, “பாஜகவை எதிர்ப்பதில் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் பிரிவதை தவிர்க்க வேண்டும். அதற்காக மாநிலக் கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும்” என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
சர்தேசாய் பேசும்போது, “மம்தா பானர்ஜி பிராந்திய அரசியலின் பெருமைமிக்கவர். பாஜகவிற்கு எதிராக மாநிலக் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்பது தொடர்பான அவரது அழைப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
கோவா சட்டப்பேரவையில் பாஜகவிற்கு 17 சட்டப்பேரவை உறுப்பினர்களும், காங்கிரஸுக்கு 15 உறுப்பினர்களும் உள்ளனர்.