முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
'இந்தியாவின் இரும்புப் பெண்மணி' முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாள் இன்று(அக்.31) அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தில்லியில் சக்தி ஸ்தலாவில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யான ராகுல் காந்தி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'என் பாட்டி கடைசி வரை பயமின்றி நாட்டுக்கு சேவை செய்தார். அவரது வாழ்க்கை எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. பெண் சக்திக்கு சிறந்த உதாரணமான அவரின் நினைவுதினத்தில் அவருக்கு பணிவான அஞ்சலி' என்று பதிவிட்டுள்ளார்.